Stalin met Modi in person
பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் நேற்று (டிசம்பர் 19) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் 4வது கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அதனைத்தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் முன்வைத்துள்ளார்.
மிக்ஜாம் புயல் பாதிப்புகள்!
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்தும், புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டமைப்புகளும், மின்சார உட்கட்டமைப்புகளும், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் கட்டமைப்புகள், கிராம சாலைகள் போன்றவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியது குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்து, மிக்ஜாம் புயல் பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறித்தும், ஒன்றிய அரசின் பல்துறை ஆய்வுக் குழு, டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அக்குழு தன்னுடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்தும், தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டதற்கு அக்குழு பாராட்டு தெரிவித்ததையும் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
விரைந்து நிவாரண நிதி வழங்க வேண்டும்!
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், கூடுதலாக நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டதை தெரிவித்து, அந்நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரிடம் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக (டிசம்பர் 17 மற்றும் 18) பெய்த கனமழை முதல் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கி, அம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்!
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் தற்போது வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மாண்புமிகு இந்தியப் பிரதமரிடம் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
அவசர நிதியாக ரூ.2000 கோடி!
எனவே, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2,000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காகவும் வழங்கிட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
IPL 2024 auction : டாப் 10 வீரர்கள் விவரம்!
டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ. பதவி இழந்த பொன்முடி… ஜெயலலிதா, ராகுல் வழக்குகள் சொல்வது என்ன?
Stalin met Modi in person