திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 16) வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாள் ஒன்றிற்கு இரண்டு தொகுதிகள் வீதம் பெரும் பொதுக்கூட்டங்களில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 22 ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய இந்த பொதுக்கூட்டப் பிரச்சாரத்தை நாளையுடன் நிறைவு செய்கிறார் ஸ்டாலின்.
இந்நிலையில், வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதியான தனது கொளத்தூர் தொகுதியில் 32 வீதிகளில் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கொளத்தூர் பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகித்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்கிருந்த இளைஞர்களுடன் கலந்துரையாடினார். மேலும், அவர்களோடு சேர்ந்து கால்பந்து விளையாடினார். பொதுமக்கள் சிலர் ஸ்டாலினிடம் ஆட்டோகிராப் கேட்டனர். அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.
தொடர்ந்து தனது ஜீப்பில் தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஐசிஎஃப் பகுதியில் வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து ஸ்டாலின் ரோடு ஷோ பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி சென்னையில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ரோடு ஷோ நடத்தினார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரும் ரோடு ஷோ மேற்கொண்டனர். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
பாஜக தேசிய தலைவர்கள் தமிழகத்தில் மேற்கொண்ட ரோடு ஷோக்களில் அதிகளவில் கூட்டம் கூடாதது ஊடகங்களில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் சென்னையில் மாஸாக ஒரு ரோடு ஷோ நடத்த வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகள் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த பின்னணியில்தான் நாளையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், சென்னையில் ஸ்டாலினின் ரோடு ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று மாலை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மயிலாடுதுறை: அரசியலை தாண்டி சாதி… விலை போகும் திமுக நிர்வாகிகள்!