திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், கொரோனா முடக்கம் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து தடைப்பட்டிருக்கும் நிலையில், தனி விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள மத்திய அரசிடம் திமுக தரப்பில் அனுமதி கேட்கப்பட்டிருப்பதாகவும் மின்னம்பலத்தில் இன்று (ஜூன் 21) காலை செய்தி வெளியிட்டிருந்தோம்.
இது தொடர்பாக சில மணித் துளிகளில் திமுக செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் மின்னம்பலத்தைத் தொடர்புகொண்டு பேசினார்.
“திமுக தலைவர் கடந்த ஜனவரி, பிப்ரவரியில் லண்டன் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது கொரோனா பரவல் காரணமாக சர்வதேசத்தில் நிலைமை சரியில்லை என்பதால் அந்தப் பயணத் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஊரடங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் திமுக தலைவர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான பணிகளிலும் , ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் திமுக தலைவர். கொரோனா பணிகளில் தமிழக அரசின் அலட்சியத்தை உடனுக்குடன் சுட்டிக் காட்டி அவற்றைத் திருத்தி ஓர் அரசு செய்ய வேண்டிய பணிகளை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபடி ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார். அந்த வகையில்தான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து உள்ளிட்ட பல விஷயங்களில் அதிமுக அரசுக்கு தனது அழுத்தங்கள் மூலமாக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தமிழக மக்கள் நலனே முக்கியம் என்று அனைத்து வகைகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக தலைவருக்கு… இப்போதைக்கு லண்டன் செல்லும் எந்த பயணத்திட்டமும் இல்லை. எனவே அதற்காக யாரிடமும் கோரிக்கை வைக்கும் சூழலும் உருவாகவில்லை. மத்திய அரசிடம் இதுபற்றி திமுக தலைவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக மின்னம்பலத்தில் வெளியான செய்தியை மறுக்கிறோம்” என்று கூறினார் திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.
இதைத் தொடர்ந்து அந்த செய்தி திரும்பப்பெறப்பட்டுள்ளது.
**வேந்தன்**
