டிஜிட்டல் திண்ணை: கொடைக்கானலில் ஸ்டாலின்… ஹாட் அமைச்சர்கள்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வெடுக்க குடும்பத்தோடு கொடைக்கானல் சென்ற போட்டோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்ததும் சில நாட்கள் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், வேட்பாளர்களை சந்தித்து ஒவ்வொரு தொகுதி நிலவரம் பற்றியும் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திமுக கூட்டணி தமிழகத்தில் 40க்கு 40 வெற்றி பெறும் என்றும், பிற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் என்றும் தகவல்கள் வந்த நிலையில் திருப்தியானார். அதன் பின் கோடைக் கால குடிநீர் திட்டங்கள் பற்றிய ஆய்வு நடத்திவிட்டு, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு வறட்சி நிவாரண நிதியும் ஒதுக்கீடு செய்தார்.

இதன் பின் ஏப்ரல் 29 ஆம் தேதி புறப்பட்டு மதுரை சென்று, அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு குடும்பத்தோடு சென்றார் முதல்வர். மே 5 ஆம் தேதி வரை கொடைக்கானலில் தங்கியிருக்கிறார். அங்கே இருந்தபடி அதிகாரிகளோடும் அமைச்சர்களோடும் பேசிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடும் அப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் கொடைக்கானலுக்கு சென்றார். எக்சிட் போல் முடிவுகள் உள்ளிட்ட ஆலோசனைகளை அங்கே சபரீசனுடன் நடத்திய ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என்ற ரிப்போர்ட்டின் அடிப்படையில் கொடைக்கானலில் வைத்து தனது திமுக அரசின் அமைச்சரவை பட்டியலை கூட தயாரித்துவிட்டார்.

இந்த ஃபிளாஷ் பேக்கை இப்போது நினைவுகூறுகிற ஜூனியர் அமைச்சர்கள், ’தலைவர் 2021 இல் கொடைக்கானலில் இருந்துதான் புதிய அமைச்சர்கள் பட்டியலைத் தயாரிச்சாரு. இப்பவும் கொடைக்கானல்ல ரெஸ்ட் எடுக்குறாரு. ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துல எந்தத் தொகுதியில ஓட்டு குறைஞ்சாலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மேல நடவடிக்கை எடுப்பேன்னு எச்சரிச்சாரு. இப்படி கிடைச்ச ரிப்போர்ட் படி சில தொகுதிகள்ல வித்தியாசம் குறைய வாய்ப்பிருக்குனு சொல்றாங்க. அதை காரணமா வச்சி கேபினட்டை மாத்திடுவாரோ?’ என விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சீனியர் அமைச்சர்களோ, ‘முதலமைச்சர் இப்ப திருப்தியான தகவல்களோடதான் கொடைக்கானல் போயிருக்காரு. அதனால பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லை. அடுத்தடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்னு வர்றதால பெரும்பாலும் அமைச்சரவை மாற்றத்துக்கு வாய்ப்பில்லை. அந்த நிம்மதியிலதான் நாங்களும் கொஞ்ச நாள் வெளி மாநிலத்துக்கு டூர் போறோம். நீங்களும் போயிட்டு வாங்க’ என்று ஜூனியர் அமைச்சர்களுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

ஊட்டிக்கு போகக் கூட பயமாதான் இருக்கு : அப்டேட் குமாரு

பிஎஸ்என்எல்-ன் முத்தான மூன்று திட்டங்கள்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share