தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக்காக நாகை மாவட்டத்துக்கு சென்றுள்ளார். Stalin has again called for an all-party meeting
இன்று (மார்ச் 3) நாகை மாவட்ட திமுக செயலாளர் கவுதமன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் கவுதமனை பாராட்டி பேசிய ஸ்டாலின், “இன்று நாம் எதிர் நோக்கி கொண்டிருக்கிற பிரச்சினைகள் எல்லாம் உங்களுக்கு தெரியும்.
மும்மொழிக் கொள்கையையும், தொகுதி மறுசீரமைப்பையும் கட்டாயப்படுத்தி கொண்டுவந்து தமிழ்நாட்டின் உரிமை மற்றும் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
அதனை எதிர்க்கவே வரும் 5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் பெரும்பாலான கட்சிகள் வருவதாக சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வரமுடியாது, வர இயலாது என்பவர்களுக்கு நான் சொல்ல வேண்டியது என்னவென்றால், இது தனிப்பட்ட திமுகவுக்கோ, தனிப்பட்ட உங்களுக்கோ பிரச்சினை இல்லை.
இதனை அரசியலாக பார்க்காமல், தமிழ்நாட்டின் உரிமைக்காக என்பதை உணர்ந்து முடிவெடுங்கள்.
நாடாளுமன்றத்தில் இப்போது தமிழ்நாடு பெற்றிருக்கிற 39 மக்களவை உறுப்பினர்களை வைத்துக்கொண்டே போராடிக்கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பு என்கிற பெயரில் மேலும் குறைப்பது என்பது முற்றிலும் தமிழ்நாட்டு உரிமைக்கு எதிரானது.
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது என்று சொன்னவர்கள் தயவுகூர்ந்து வரவேண்டும், வரவேண்டும்’ என அழைப்பு விடுத்தார்.
முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். பிப்ரவரி 25ஆம் தேதி கோவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டுக்கு எந்த குறையும் வராது என்று கூறியிருந்த நிலையில் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனவே, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் அழைப்புவிடுத்து பேசியுள்ளார். Stalin has again called for an all-party meeting
