தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். stalin continues his work from apollo
தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தவாறு அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகிறார். இன்று (ஜூலை 23) தலைமை செயலாளர் முருகானந்தம் சில கோப்புகளுடன் மருத்துவமனைக்கு சென்றார்.
அதை பார்வையிட்டு கையெழுத்திட்ட முதல்வர் ஸ்டாலின், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட பணிகள் குறித்து காணொளி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், கோயம்புத்தூர் ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதுவரை அம்மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்தும் கேட்டறிந்தார்.
அத்துடன் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மனுக்கள் அளிக்க வருகை தந்த பயனாளிகளிடம் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். stalin continues his work from apollo
