கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை தொடர்ந்து அவரது தாயார் செல்வி, வரும் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 27) முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் சக்தி மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தை அடுத்து சிபிசிஐடி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளனர்.
ஆய்வறிக்கை கேட்டு மனு தாக்கல்!
இந்நிலையில் ஸ்ரீமதி உடலை இரண்டு முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையை ஜிப்மர் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை கடந்த 22ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து ஆய்வறிக்கையின் நகலை வழங்குமாறு ஸ்ரீமதியின் தாயார் செல்வி தரப்பில் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், ஆய்வறிக்கை இன்று வழங்கப்படும் என்று அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீமதியின் தாய் செல்வி, ”வரும் 26 ஆம் தேதி நெசலூர் கிராமத்திலிருந்து நடைபயணமாக சென்னைக்கு சென்று தமிழக முதலமைச்சரை சந்தித்து நீதி கேட்டு மனு அளிக்க உள்ளேன்” என்று தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் – ஸ்ரீமதி தாயார் சந்திக்க ஏற்பாடு!
இந்நிலையில் ஸ்ரீமதியின் தாயார் செல்வி, வரும் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 27) சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவரோடு வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் சிலரும் முதல்வரை சந்திக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் செய்துள்ளனர்.
நடைபயணம் ரத்து!
இதனையடுத்து 26ம் தேதி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதிக்கேட்டு அவரது தாயார் செல்வி மேற்கொள்ள இருந்த நடைபயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்டோபர் ஜெமா
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள்: ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு!