‘விஜய பத்தி தப்பா பேசுனா ஸ்ரீமதிக்கு கோவம் வந்துரும்’ : தாயார் செல்வி

Published On:

| By Selvam

கள்ளக்குறிச்சி கனியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த மாதம் 13ஆம் தேதி, மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீமதி குறித்து மனம் திறந்துள்ளார் அவரது தாயார் செல்வி. ஸ்ரீமதிக்கு என்ன பிடிக்கும், அவரது குணாதிசியம் என்ன என்பது தொடர்பாக பேசியுள்ளார்.

குறிப்பாக, ஸ்ரீமதிக்கு நடிகர் விஜய் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். விஜய்யை பற்றி யாராவது எதாவது சொல்லிவிட்டால் அவ்வளவு கோபப்படுவார் என்று கூறியுள்ளார்.

தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எனக்கு 2005-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. என்னுடைய அக்காவுக்கு 10 வருடமாக குழந்தை இல்லை.

அண்ணன் அப்போது திருமணம் செய்துகொள்ளவில்லை. எங்கள் வீட்டில் ஸ்ரீமதி தான் முதல் வாரிசு.

அதனால் அனைவரும் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். ஸ்ரீமதி தான் அவளது தம்பிக்கு சந்தோஷ் என்று பெயர் வைத்தார். நான் வீட்டில் இல்லாத போதும் எனது மகனை அக்கறையுடன் பார்த்துக்கொள்வார்.

ஸ்ரீமதி வீட்டை விட்டு வெளியே எங்கும் பெரிதாக சென்றதில்லை. அமைதியான ஒரு பெண்.

srimathi mother about actor vijay

நான்கு அல்லது ஐந்து பேர் மட்டும் தான் ஸ்ரீமதிக்கு நண்பர்களாக இருப்பார்கள். அவர்களுடன் மட்டும் தான் ஸ்ரீமதி நெருங்கி பழகுவார். என்னுடைய அண்ணன் கார் ஓட்டக் கற்றுக்கொடுத்தவுடன் உடனடியாக கார் ஓட்டக் கற்றுக்கொண்டார்.

இருசக்கர வாகனங்கள் ஓட்டுவார். நன்றாக ஓவியம் வரைவார். நன்றாக படிப்பார், திறமையானவர். நன்றாக பாடவும் செய்வார். சினிமா குறித்த நிறைய விஷயங்கள் ஸ்ரீமதிக்கு தெரியும்.

நடிகர் விஜய் என்றால் ஸ்ரீமதிக்கு மிகவும் பிடிக்கும். நடிகர் விஜயுடைய தீவிரமான ரசிகை. விஜய் பாடலுக்கு நன்றாக நடனம் ஆடுவார். விஜயைப் பற்றி நாம் ஏதாவது கூறிவிட்டால் ஸ்ரீமதிக்கு நிறைய கோபம் வரும்” என்று தனது மகளை பற்றி பேசியுள்ளார் செல்வி.

செல்வம்

ஸ்ரீமதி தாயாரிடம் போனில் என்ன பேசினார் முதல்வர் ஸ்டாலின்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share