இலங்கை அதிபர் தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

Published On:

| By Selvam

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (செப்டம்பர் 21) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபரானார். 2022-ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக,  அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச விலகினார்.

இதனையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் 19-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் 1.7 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  63,000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுட்டுள்ளனர்.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,  தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, தமிழர்களின் பொது வேட்பாளர்  பா. அரியநேத்திரன் உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இருப்பினும், ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸநாயகே ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இலங்கையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் மிகவும் உற்சாகத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவானது மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். இன்று இரவு அல்லது நாளை அதிகாலை இலங்கையின் புதிய அதிபர் யார் என்ற விவரங்கள் தெரியவரும்.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!

அமிதாப் பச்சன் Vs ரஜினி: தெறிக்கும் தோட்டா… மிரட்டும் ‘வேட்டையன்’ டிரைலர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share