இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் தான் காரணம் என்று இலங்கை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
2022-ஆம் ஆண்டு இலங்கை அரசானது மிக மோசமான நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. இதனால் எரிபொருள், உரங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. விலைவாசி உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த துவங்கினர். பொருளாதார நெருக்கடி காரணமாக 2022-ஆம் ஆண்டு இலங்கை அரசானது திவால் நிலையை அறிவித்தது.
இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி குறித்து உரிமைக் குழுவான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (டிஐஎஸ்எல்) 13 முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனு மீது இலங்கை நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, “இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களான முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே உள்ளிட்டோர் தான் காரணம்.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் முன்னாள் செயலாளர்களான பி.பி. ஜயசுந்தர மற்றும் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரும் உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர்” என்று தீர்ப்பு வழங்கியுள்ளது
இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து டிஐஎஸ்எல் நிர்வாக இயக்குனர் நடிஷானி பெரேரா கூறும்போது, “பொதுமக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது மக்கள் பிரதிநிதிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு எச்சரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை எச்சரிக்கை: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை!
கேரளாவில் அதிரடி: 5 வயது சிறுமி கொடூர கொலை… மரண தண்டனை தீர்ப்பு!
