பேச்சுவார்த்தையே கிடையாது – ‘தல’ தோனியுடன் ஹர்பஜன் சிங்குக்கு என்ன பிரச்னை?

Published On:

| By Minnambalam Login1

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். தனக்கு மரியாதை அளிப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை கொடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக தோனி 2007ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரின் முக்கியமான ஸ்பின்னராக ஹர்பஜன் சிங் இருந்தார். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இந்திய வெற்றியில் ஹர்பஜன் சிங் முக்கியப் பங்காற்றினார்.

இந்த இரு தொடர்களிலும் ஹர்பஜன் 7 மற்றும் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து, அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் வருகையால், ஹர்பஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மங்கியது.

கடைசியாக 2016ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் ஹர்பஜன் சிங் இந்திய அணிக்காக தோனியின் கீழ் விளையாடினார். அடுத்து, 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் கீழ் ஹர்பஜன் விளையாடி இருந்தார்.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் விலகிய பின், சிஎஸ்கே அணியுடனான அவரின் பயணமும் முடிந்து போனது. இந்த நிலையில், சமீபத்தில் ஹர்பஜன் சிங்கிடம் தோனியுடனான நட்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, தான் தோனியுடன் பேசுவதில்லை என்று பதிலளித்தார்.

மேலும், ‘நாங்கள் இருவரும் சிஎஸ்கே அணிக்காக இணைந்து விளையாடிய போது பேசியுள்ளோம். இப்போது, இருவரும் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். நான் பேசாததற்கு எந்த காரணமும் இல்லை. ஒருவேளை தோனிக்கு காரணங்கள் இருக்கலாம். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது கூட களத்தில் மட்டுமே பேசிக் கொள்வோம். அதன்பின் எனது அறைக்கு அவரோ, அவரின் அறைக்கு சென்று நானோ சென்று பேசியதில்லை.

தோனிக்கு எதிராக சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. எனது அழைப்புகளுக்கு மதிப்பளித்து பேசுபவர்களிடம் மட்டுமே பேசுவேன். மற்றவர்களிடம் சென்று பேசுவதற்கு எனக்கு நேரமில்லை, உறவு முறை என்பது நாம் மட்டுமே பேண வேண்டிய விஷயம் அல்ல. எதிர்முனையில் இருப்பவர்களுக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது” என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

காவி உடை அணியாதது ஏன்? – சாமியாராக மாறிய புவனேஸ்வரி சொல்லும் விசித்திர காரணம்!

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது துப்பாகிச்சூடு!