மூன்றாவது டி20 போட்டி:  வெஸ்டீஸை வீழ்த்தி இந்திய அணி முன்னிலை!

Published On:

| By Minnambalam

India vs West Indies

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20  தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20  கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதிய மூன்றாவது டி20 போட்டி நேற்று (ஆகஸ்ட் 2) இரவு நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் பிராண்டன் கிங் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பிராண்டன் கிங் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக கெய்ல் மேயர்ஸுடன் கேப்டன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஆடிய மேயர்ஸ் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து ஆடிய இந்த ஜோடியில் நிகோலஸ் பூரன் 22 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து கெய்ல் மேயர்ஸும் 73 (50) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மயர் 20 (12) ரன்களும், ரோவ்மேன் பவல் சிறிது நேரம் நீடித்த நிலையில் 23 (14) ரன்களில் கேட்ச் ஆனார். முடிவில் தேவான் தாமஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், ஹோல்டர் ஒரு ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் இரண்டு விக்கெட்டுகளும், ஹர்த்திக் பாண்டியா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் ரோஹித் சர்மா 11 (5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் தசை பிடிப்பு காரணமாக வெளியேறினார். அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியில் அதிரடியில் மிரட்டிய சூர்யகுமார் யாதவ் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 24 (27) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 76 (44) ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் சீரான ரன் குவிப்பில் ஈடுபட்ட ரிஷப் பண்ட் மற்றும் தீபக் ஹூடா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். முடிவில் ரிஷப் பண்ட் 33 (25) ரன்களும், தீபக் ஹூடா 10 (7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 19 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக டோமினிக் டீரிக்ஸ், ஜேசன் ஹொல்டர், ஹொசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

-ராஜ்

ஊக்கமருந்து விவகாரம்: தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel