உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2021 முதல் 2023 ஆண்டு வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்த போட்டிக்கான வீரர்கள் பட்டியலை இந்திய அணி அண்மையில் வெளியிட்டது.
அதன்படி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பொறுத்தவரை சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ராகுல், அஸ்வின், பரத், ரஹானே, ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பிடித்தனர். அத்துடன் கூடுதல் வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான கூடுதல் வீரராக இருந்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசிசி நேற்று(மே28) அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 3 தேதி ருதுராஜ் கெய்க்வாட்-க்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியில் இந்த அதிரடி மாற்றத்தை ஐசிசி எடுத்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 போட்டிகளில் 625 ரன்கள் குவித்துள்ளார். மேலும், கடந்த ரஞ்சி டிராபி தொடரில் 5 ஆட்டங்களில் 1 சதம், 1 அரைசதத்துடன் 404 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஐபிஎல் பைனல்: இன்றும் மழை குறுக்கிட்டால் யாருக்கு கோப்பை?
இந்தியா – ஜப்பான் கூட்டு உச்சி மாநாடு: முதல்வர் கோரிக்கை!