Carrom WorldCup : மூன்று தங்கம் வென்ற தமிழ்நாட்டு சிறுமி… ஸ்டாலின் பாராட்டு!
அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் உலகக்கோப்பை போட்டியில் இன்று (நவம்பர் 17) தமிழ்நாட்டு வீராங்கனை காசிமா என்ற சிறுமி 3 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆறாவது கேரம் உலகக்கோப்பை போட்டி கடந்த 11ஆம் தேதி கோலகலமாக தொடங்கியது.
இதில் இந்தியாவுடன், அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து நியூசிலாந்து, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்றன.
இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற வீரர்களில் தமிழக வீராங்கனைகள் காசிமா, நாகஜோதி, மித்ரா, ஆகியோர் பங்கேற்றனர். இதில் காசிமா 17 வயதான சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் காசிமா .
இவர் சென்னை புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஆவார். தனது மகளின் வெற்றியை அறிந்த காசிமாவின் தந்தை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இதுவார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியான தருணம். ஒட்டுமொத்த இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. எனது மகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் தமிழ்நாட்டு வீராங்கனைகள் நாகஜோதி, காசிமா, மித்ரா மற்றும் பயிற்சியாளர் மரியம் இருதயம் ஆகியோருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சத்துக்கான காசோலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியிருந்தார்.
காசிமா மூன்று பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், மித்ராவும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
மேலும் கேரம் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா ஆடவர் மற்றும் மகளிர் அணி சிறந்த அணியாக தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரம் உலகக்கோப்பை போட்டியில் அவரது வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெருமை கொள்கிறேன் மகளே…
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது Carrom WorldCup போட்டியில் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே… எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது!” என்று ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெற்றிப்பயணம் தொடரட்டும்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கை காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம் – பயிற்சிக்காக ரூ.1.50 லட்சத்தை நாம் வழங்கி வாழ்த்தியிருந்த நிலையில், 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார். தங்கை காசிமாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும்!” என உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து உலக அரங்கில் இந்தியாவின் பெயரை பொறித்த காசிமாவிற்கு பலரும்வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கூட்டணி சர்ச்சை எழுப்பிய அதிமுக நிர்வாகி… மேடையிலேயே பளீர் பதில் அளித்த திருமா
ஒ.செ.க்களுக்கு புதிய பொலீரோ… அசத்திய அரியலூர் அரிமா சிவசங்கர்