ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று(ஏப்ரல் 20) நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
தொடக்க வீரர்களாக விராட் கோலி , டூ பிளஸிஸ் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடினர். பந்துகளை , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். தொடர்ந்து ஆடிய டூ பிளஸிஸ் 84 ரன்களும் , விராட் கோலி 59 ரன்களும் அடித்து அசத்தினர்.
அதேநேரம், தொடக்க வீரர்களைத்தவிர அணியின் மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணி தரப்பில் ஹர்ப்ரீத் ப்ரார் 2 விக்கெட்களை எடுத்தார். 175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் ரன்கள் குவிக்க திணறினர். பெங்களூரு அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துவந்தனர்.
தொடக்க வீரராக இறங்கிய பிரப்சிம்ரன் சிங் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பர்னெல் பந்தில் போல்டானார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
கடைசிக்கட்டத்தில் ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். முடிவில் பஞ்சாப் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது, இதனால் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி சார்பில் சிராஜ் அற்புதமாக பந்துவீசி 4 விக்கெட்களையும் மற்றும் ஹசரங்கா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சிண்டிகேட் உறுப்பினர்: ராஜினாமா செய்தார் உதயநிதி