மொராக்கோ அணி ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
நேற்று (டிசம்பர் 10 ) நடைபெற்ற போர்ச்சுகல் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் மொராக்கோ அணி வெற்றி பெற்றால் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பு இருந்தது.
இன்னொரு புறம் போர்ச்சுகல் தோல்வியடைந்தால் உலகக்கோப்பைக்காக காத்திருந்த ரொனால்டோவின் கனவு கானல் நீராய் போகும் நிலை இருந்தது.
இதனால் முன்பை விட இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய இந்த ஆட்டம் கால்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி ரொனால்டோவின் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே கடந்த போட்டியை போலவே, நட்சத்திர வீரர் ரொனால்டோ தொடக்க லெவனில் களமிறக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆட்டம் தொடங்கிய முதல் சில நிமிடங்களில் இரு அணி வீரர்களும் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
பின்னர் மொராக்கோ அணியின் தடுப்பாட்டம் வலிமையடைந்த போது, அவர்கள் அட்டாக்கிலும் பாய தொடங்கினர்.

மறுபக்கம் போர்ச்சுகல் அணி தரப்பில் ஒருங்கிணைந்த அட்டாக்கை செய்ய முடியாமல் திணறியது.
இதனிடையே 42 -வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் என்- நெசரி ஹெட்டர் மூலம் முதல் கோல் அடித்து, அந்த அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தினார். இதன்பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியின் முதல் சில நிமிடங்களிலேயே நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறக்கப்பட்டார்.
இருந்தும் போர்ச்சுகல் அணியின் அட்டாக்கை மொராக்கோ அணி வீரர்கள் சிறப்பாக தடுத்து நிறுத்தினர்.
ஒரு கட்டத்தில் போர்ச்சுகல் அணி வீரர்கள் பாக்ஸிற்குள் பந்தை கொண்டு சென்றாலே, எளிதாக அதனை தடுத்து மொராக்கோ அணி அட்டாக் செய்ய தொடங்கியது.
ஆட்டத்தின் முடிவில் மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
போர்ச்சுகல் அணியின் தோல்வி காரணமாக நட்சத்திர வீரர் ரொனால்டோவின் உலகக்கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து களத்தில் இருந்து கண்ணீருடன் ரொனால்டோ வெளியேறினார்.
மொராக்கோ அணியுடனான தோல்வி காரணமாக போர்ச்சுகல் அணியின் பயணத்தோடு, 37 வயதாகும் ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவும் கானல் நீராக முடிவுக்கு வந்துள்ளது.

இது உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் போட்டிகளில் ஒரு கோல் கூட அடித்ததில்லை என்ற மோசமான சாதனையுடன் ரொனால்டோவின் இந்த பயணம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“முட்டாளே போ”: கூலான மெஸ்ஸி சீறியது ஏன்?
உலக கோப்பை கால்பந்து: நெதர்லாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ஜென்டினா