இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருங்கால இந்திய கிரிக்கெட்டை வளமாக அமைக்க விரும்புகிறோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ரோஹித் சர்மா, “நாம் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம் என்பதால் காயம், பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் இது பெஞ்சில் இருக்கும் வீரர்களையும் வலுவானவர்களாக மாற்றி சர்வதேச அரங்கில் சிறப்பாகச் செயல்படும் அளவுக்கு தயார்படுத்த உதவுகிறது.
நாங்கள் வலுவான பெஞ்சை உருவாக்கி அதன் வாயிலாக வருங்காலத்தில் இந்திய கிரிக்கெட்டை வளமாக அமைக்க விரும்புகிறோம். நாங்கள் ஒவ்வொரு நாளும் சிறப்பாக முன்னேற முயற்சி செய்கிறோம். ஒரு தொடரில் வெற்றி தோல்விக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக ஒரு சிறந்த அணியாக முன்னேறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
ஒவ்வொரு தனி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற வைப்பது அவசியமாகும். அதற்காக அணி நிர்வாகம் என்ன திட்டங்களை வகுக்கிறதோ அதில் அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை கொடுத்து முன்னோக்கி நடக்க உதவ வேண்டும்.
ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வந்தபோது நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து வருங்காலத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று பேசி முடிவெடுத்துள்ளோம். அவரும் என்னைப் போன்ற எண்ணத்தையே கொண்டுள்ளார். பொதுவாக அணியில் எந்த குழப்பமும் ஏற்படக்கூடாது என்பதே அணி வீரர்களுக்கு எங்களின் செய்தியாகும்.
அதுபோக வரலாற்றில் நாங்கள் விளையாடிய கிரிக்கெட்டின் ஸ்டைலை மாற்ற முயற்சி செய்கிறோம். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் குறிப்பிட்ட வகையில் விளையாட நினைக்கும் எங்களுக்கு அவரும் ஆதரவு கொடுத்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் 27ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 28ஆம் தேதி மோதுகின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்தத் தொடருக்காக வரும் 20ஆம் தேதி துபாய் செல்ல உள்ளது.
அதற்கு முன்பாக ஜிம்பாப்வே தொடரில் ஓய்வில் இருக்கும் ரோஹித் சர்மா, கோஹ்லி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். பின்னர் துபாய் செல்லும் அவர்களுக்கு அங்கு மூன்று நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
ராஜ்