Hitman இல்லை fatman – ரோகித் மீது காங்கிரஸ் கட்சிக்கு என்ன கோபம்?

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை குண்டானவர் என்றும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்களிலேயே தகுதி குறைவானவர் என்றும் விமர்சித்திருந்தார். இதற்கு, பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். rohit is fatman – congress

இதையடுத்து, அந்த பதிவை நீக்கிய ஷாமா விளக்கமளித்து மற்றொரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ‘விளையாட்டு வீரர்கள் ஃபிட்னெஸ்சுடன் இருக்க வேண்டுமென்பதற்காக அந்த பதிவை வெளியிட்டேன். உருவக் கேலி செய்யும் நோக்கமில்லை. முந்தைய இந்திய கேப்டன்களுடன் ரோகித் ஷர்மாவை ஒப்பிட்ட தில் என்ன தவறு கண்டீர்கள். அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. இது ஜனநாயக நாடு. தேவையில்லாமல் என்னை அட்டாக் செய்ய வேண்டாம்’ என்று கூறியிருந்தார்.

சர்ச்சை வெடித்ததையடுத்து, காங்கிரஸ் கட்சி தலைவர் பவன் கீரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ ‘ இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஒருவரை இப்படி விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஷாமாவின் விமர்சனத்துக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஷாமாவிடத்தில் பதிவை நீக்க கூறியுள்ளோம். எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளோம். இந்திய விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரையும் உயர்வாக கருதுகிறோம். எவரையும் குறைத்து மதிப்பிடும் எத்தகைய பேச்சையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.rohit is fatman – congress

அதேபோல, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ரஜனி பாட்டீலும் ஷாமாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ;’ யாரையும் உருவக் கேலி செய்வதை காங்கிரஸ் கட்சி ஏற்று கொள்ளாது. விளையாட்டு வீரர் ஒருவரை இப்படி விமர்சிப்பது சரியல்ல. காங்கிரஸ் கட்சி ஷாமாவிடத்தில் இருந்து விளக்கம் கேட்கும் ‘ என்று தெரிவித்துள்ளார்.

ஷாமாவின் பதிவுக்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். என்.டி.டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், ‘முக்கியமான தொடரில் இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. இது போன்ற விமர்சனங்கள் இந்திய வீரர்களின் முயற்சியை சீர்குலைக்க வைக்கும்’ என்று கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி சவுகதா ராய் கூறுகையில், ‘ரோகித் ஷர்மா ஒரு போட்டியில் சதமடித்தால் அடுத்த போட்டிகளில் 2,4,6 10 என்றுதான் ரன்கள் அடிக்கிறார். மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடுவதால் மட்டுமே இந்தியா வெற்றி பெறுகிறது . ரோகித் ஷர்மா இந்திய அணியில் இருக்க கூடாது ‘என்று ஷாமாவுக்கு ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share