இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வாரா? என்பது குறித்த கேள்விக்கு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில் அளித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதனால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அத்தோடு முடிவுக்கு வந்து விடும் என, கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்தன.
இதற்கு நேர்மாறாக டிராவிட் தலைமையில் ஏற்கனவே இருந்த பயிற்சியாளர் குழுவினர் தொடர்வார்கள் என சில வாரங்களுக்கு முன்பாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் எவ்வளவு காலம் நீடிப்பார்கள்? என்பதை தெரிவிக்கவில்லை.
தற்போது டிராவிட் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ராகுல் டிராவிட் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ” நாங்கள் தற்போது பதவிக்காலத்தை நீட்டித்து இருக்கிறோம். ஆனால் அது எவ்வளவு காலம்? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
டிராவிட் மற்றும் குழுவினர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்தவுடன் அவர்களுடன் அமர்ந்து பேசி இதுகுறித்த இறுதி முடிவை எடுப்போம். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டி20 தொடரின் போது ஹர்திக் இந்திய அணிக்கு திரும்புவார்.
நாங்கள் அவரின் உடல் தகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். டி20 பொறுத்தவரை ரோஹித்தின் இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஷமி தற்போது கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உடல் தகுதியை பொறுத்து அவர் தேர்வு செய்யப்படலாம்,” என்றார்.
டிராவிட் பயிற்சியின் கீழ் 2022 ஆசிய கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், 2023 உலக கோப்பை என நான்கு பெரிய தொடர்களில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
2023 ஆசிய கோப்பையில் மட்டுமே அவர் தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
Comments are closed.