ஈபிள் டவரின் இரும்பில் உருவான ஒலிம்பிக் பதக்கங்கள்… காரணம் என்ன? 

Published On:

| By Minnambalam Login1

Paris 2024: Olympic medals feature

ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள் நேற்று (பிப்ரவரி 8) அறிமுகம் செய்யப்பட்டன. இதில் தனித்துவமான அம்சமாக உலகப்புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் இரும்புத்துண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த போட்டியில், 200 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

போட்டிக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளதால் இதற்கான ஏற்பாடுகளை, ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டியினர் தற்போது முழுவீச்சில் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பதக்கங்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. பாரிஸில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பதக்கத்தில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்களை ஒலிம்பிக் கமிட்டியினர் விளக்கினர்.

பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிக்காக மொத்தம் 5084 பதக்கங்கள் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் 2,600 பதக்கங்கள் ஒலிம்பிக்கிலும், மீதமுள்ள பதக்கங்கள் பாரா ஒலிம்பிக்கிலும் வழங்கப்பட உள்ளது.

பதக்கத்தின் முன்பக்கத்தில் கிரேக்கத்தின் வெற்றி கடவுளான நைக்கி ஏதென்ஸ் ஸ்டேடியத்தின் முன் நிற்பது போன்றும், ஒலிம்பிக் வளையம் மற்றும் நடப்பு ஒலிம்பிக்கின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

அதோடு பிரான்ஸின் அடையாளமாகவும், உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும் திகழும் ஈபிள் கோபுர சின்னமும் இடம் பெற்றுள்ளது. பதக்கத்தின் பின்பக்கத்தில் ஈபிள் கோபுரத்தின் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரத்தை புதுப்பித்த போது அதில் இருந்து எடுக்கப்பட்ட இரும்பு உலோகங்கள் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு இருந்தன. அவை தற்போது பாலிஷ் செய்யப்பட்டு பதக்கத்தின் பின்பக்கத்தில் பதிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஒவ்வொரு பதக்கத்திலும் ஈபிள் கோபுரத்தின் 18 கிராம் இரும்பு அடங்கியிருக்கும். இவற்றை பிரான்ஸின் பிரபல ஆபரண நிறுவனமான சாமெட் வடிவமைத்துள்ளது.

இதேபோல பாரா ஒலிம்பிக் பதக்கத்தின் ஒரு பக்கத்தில் ஈபிள் கோபுரத்தின் தோற்றம் பொறிக்கப்பட்டு உள்ளது.

ஒலிம்பிக் போட்டி முடிந்தவுடன், பாரா ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை அங்கே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிக பிரியா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : தொழிலாளர்களின் நிலை?

இந்தியாவில் எத்தனை கோடி வாக்காளர்கள்? – தேர்தல் ஆணையம் அறிவிப்பு! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel