பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்முடைய பெருமை அவருக்கு மரியாதை கொடுங்கள் என்று ஷாஹீன் அப்ரிடி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.
இங்கிலாந்தின் ஆதிக்கம்:
முதல் ஆட்டத்திலிருந்து தங்களது ஆதிக்கத்தை பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களை தொடரின் எந்தவொரு இடத்திலும் எழ விடவில்லை.
அதன்படி ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்திலும், முல்தான் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்திலும், இறுதியாக கராச்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
விமர்சனத்துக்குள்ளான பாக்.அணி:
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அவர்கள் டி20 கிரிக்கெட் போன்று அதிரடியாக விளையாடியது அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது. அதே வேளையில் அவர்களிடம் அடி வாங்கிய பாகிஸ்தான் அணியானது தற்போது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ஏனெனில் இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் அணி தங்களது சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
கடுமையாக சாடும் முன்னாள் வீரர்கள்:
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணம் போதிய அனுபவம் இல்லாத பாபர் அசாம் இருப்பது தான் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவருகிறது.
மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் அவர் கேப்டன் பதவியில் இருந்து வெளியே வந்தால் தான் பாகிஸ்தான் அணி சரியாகும் என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அண்மையில் கூட பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனோரியா ‘பாபர் அசாம் கேப்டனாக பூஜ்ஜிய மாக உள்ளார். அவர் அணியை வழிநடத்துவதற்கு தகுதியானவர் இல்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை வழிநடத்தும் திறன் அவருக்கு இல்லை என்று கடுமையாக சாடியிருந்தார்.
பாபர் அசாம் நம்முடைய பெருமை:
இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை ஆதரித்து அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தின் மூலமாக பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது : நம்முடைய கேப்டனுக்கு கொஞ்சம் மரியாதையை கொடுங்கள். பாபர் அசாம் நம்முடைய பெருமை. அவருக்கு நாம் தொடர்ந்து ஆதரவுகளை கொடுக்க வேண்டும்.
இன்னும் அவருடைய கதை முடியவில்லை என்று அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் அணி குறித்து விமர்சனம் பெருகிவரும் வேளையில் பாபர் அசாம் மீதும் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாபர் அசாமும் சற்று மன வருத்தத்தில் சில கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நவதாராளமயப் பொருளாதாரம்: ஒரு விளக்கப்படம்!
”இந்தியாவுக்கு இப்போ இரண்டு தேசத் தந்தைகள்” – அம்ருதா ஃபட்னாவிஸ்