செஸ் ஒலிம்பியாட் -பாகிஸ்தான் திடீர் விலகல்.. காரணம் என்ன?

Published On:

| By christopher

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக ஒலிம்பியாட் ஜோதி எடுத்து செல்லப்பட்டதாக கூறி தமிழ்நாட்டில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வீரர்களும் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க 10 பேர் கொண்ட குழு சென்னைக்கு செல்லும் என்று பாகிஸ்தான் செஸ் ஃபெடரேஷன் (CFP) கடந்த 26ஆம் தேதி அறிவித்திருந்தது. அதன்படி அந்நாட்டைச் சேர்ந்த வீரர்களும் பயிற்சி பெற்று வந்தனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலகுவதாக தற்போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி எடுத்துச்செல்லப்பட்டது. அதன்படி கடந்த 21ம் தேதி காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனப்படும் பகுதி வழியாக ஜோதி எடுத்துச் செல்லப்பட்டது. சர்வதேச சமூகம் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கேலிக்கூத்தை இந்தியா செய்துள்ளது. விளையாட்டுடன் அரசியலை கலக்கும் இந்தியாவின் சிறுபிள்ளைத்தனமான முடிவை பாகிஸ்தான் அரசு வன்மையாக கண்டிக்கிறது. இந்திய அரசின் இந்த சட்டவிரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் உயர்மட்ட அளவில் பாகிஸ்தான் எழுப்பும்” என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel