கால்பந்து ஹீரோக்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸியின் ஆட்டத்தை நேரில் பார்ப்பதற்காக கேரளாவைச்சேர்ந்த பெண் ஒருவர் தன் ஐந்து குழந்தைகளுடன் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (நவம்பர் 26 ) நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ’சி’ பிரிவு ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின.
முன்னதாக சவுதி அரேபியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியை சந்தித்தது அர்ஜென்டினா அணிக்கு மட்டும் இல்லாமல் உலகெங்கும் உள்ள மெஸ்ஸி ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தாது. இதனால் அடுத்த இரு போட்டிகளிலும் அர்ஜென்டினா வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நேற்று பரபரப்பாக தொடங்கிய அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா அணி பதிவு செய்தது.
இந்நிலையில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் ஆட்டத்தை நேரில் காண கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் காரிலேயே கத்தார் பயணித்துள்ள சம்பவம் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பின் கால்பந்து விளையாட்டுக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
அண்மையில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மருக்கு ஆற்றுக்குள் பிரம்மாண்ட பேனர்கள் வைத்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்தனர். அதுமட்டுமல்லாமல் கத்தார் நாடு இந்தியாவுக்கு அருகில் இருப்பதால், ஏராளமான ரசிகர்கள் கத்தார் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த கால்பந்து ரசிகை தனது 5 குழந்தைகளுடன் கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரை நேரில் காண இந்தியாவில் இருந்து கத்தாருக்கு மஹிந்திரா தார் வாகனத்தில் சென்றுள்ளார்.
அர்ஜென்டினா ஜெர்சியுடன் மஹிந்திரா காரில் அந்த பெண் தனது 5 குழந்தைகளுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவை சேர்ந்த நாஜி நௌஷி என்ற பெண் கேரளாவில் இருந்து காரில் புறப்பட்டு மும்பை சென்றுள்ளார். மும்பையில் இருந்து கப்பல் வழியாக ஓமனில் காருடன் களமிறங்கிய அவர், மீண்டும் மஸ்கட் வந்து அங்கிருந்து கத்தார் வந்து சேர்ந்துள்ளார்.
இதில் அவர் மட்டுமல்லாமல் அவரின் 5 குழந்தைகளும் பயணம் மேற்கொண்டுள்ளது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, மஹிந்திரா காரிலேயே அரிசி, தண்ணீர், பருப்பு மற்றும் பழங்கள் வைத்துக் கொண்டு பயணித்து வருகிறார்.
இதுகுறித்து நாஜி நெளஷி கூறுகையில், ”எனது ஹீரோ லியோனல் மெஸ்ஸியின் ஆட்டத்தை நான் பார்க்க விரும்புகிறேன். இந்த பயணத்தில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சமைக்கிறேன். இதன் மூலம் பணத்தை சேமிக்க முடிவதோடு, குழந்தைகளின் உணவு பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடிகிறது” என்று தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
புதுப்பிக்கப்பட்ட ஏவிஎம் ஸ்டுடியோ!
தனி ஈழம் நிறைவேறாமல் போனதற்கு இதுதான் காரணம்: சுப்புலட்சுமி ஜெகதீசன்