மெஸ்ஸி டாட்டூ: நிரம்பி வழியும் ரசிகர் கூட்டம்!

அர்ஜென்டினாவில் லியோனல் மெஸ்ஸியின் டாட்டூ குத்துவதற்காக ஒவ்வொரு கடைகளின் முன்பும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

உலகம் முழுவதும் உள்ள அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸி ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அர்ஜென்டினாவில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடி தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது மெஸ்ஸி மற்றும் உலக கோப்பை புகைப்படத்தை டாட்டூ குத்துவதற்காக அர்ஜென்டினா ரசிகர்கள் ஒவ்வொரு கடைகளின் முன்பும் வரிசையில் நிற்கின்றனர்.

இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் டாட்டூ குத்தும் கலைஞர் எஸ்டெபன் வுசினோவிச் கூறுகையில், “அர்ஜென்டினா வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிக ரசிகர்கள் டாட்டூ குத்த வருவதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு டாட்டூ குத்த இப்போதே முன்பதிவு செய்துள்ளார்கள்.

முன்னதாக சில பேர் பாம்பு மற்றும் மண்டை ஓடுகளை டாட்டூ குத்துவதற்கு முன்பதிவு செய்திருந்தார்கள். ஆனால் தற்போது அவர்கள் மெஸ்ஸி அல்லது உலக கோப்பை டாட்டூ குத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். நிறைய பேர் உலக கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்றதை தான் டாட்டூ குத்துகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக மெஸ்ஸியும், கோல்கீப்பர் எமிலியானோ மார்டினஸ் படத்தையும் டாட்டூ குத்துகிறார்கள். மேலும் சிலர் ஏஞ்சலினா டி மரியா போன்று தங்களது கால்களிலும் டாட்டூ குத்திக்கொள்கிறார்கள்.” என்றார்.

அர்ஜென்டினா உலக கோப்பையை வென்ற புகைப்படத்தை டாட்டூ குத்திய நிக்கோலஸ் ரெக்கானிக் கூறும்போது, “இந்த உலக கோப்பையை எங்களுக்கு மூன்றாவது முறையாக பல வருடங்களாக கஷ்டப்பட்டு பெற்று தந்த அணியை கொண்டாடும் வகையிலும், அர்ஜென்டினா அணிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் நாங்கள் டாட்டூ குத்தி வருகிறோம்.” என்றார்.

செல்வம்

100 நாள் வேலை திட்டம்: வருகைப்பதிவில் மாற்றம்!

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியது என்ன?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts