ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்று (மார்ச் 17) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 81 ரன்களும், விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்க்லீஸ் 26 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2, குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதனைத்தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
ஆனால் முதல் 10 ஓவர்களிலேயே இஷான் கிஷான்(3), விராட்கோலி(4), சூர்யகுமார் யாதவ்(0) மற்றும் சுப்மன் கில் (20) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்த 4 விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 40 ரன்களை தாண்டுவதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியது.
அப்போது இணைந்த கே.எல்.ராகுல் – கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது.
இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஹர்திக் பாண்ட்யா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா, கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அரைசதத்துடன் கே.எல்.ராகுல் 75 ரன்களும், ஜடேஜா 45 ரன்களும் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முக்கியமான கட்டத்தில் 6வது விக்கெட்டுக்கு இணைந்த கே.எல்.ராகுல் – ரவீந்திர ஜடேஜா ஜோடி 108 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2வது போட்டி வரும் 19ம் தேதி விசாகப்பட்டினத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
குறைந்துக்கொண்டே வரும் தமிழகத்திற்கான நிதி: பி.டி.ஆர்
அதிமுகவுடன் கூட்டணி என்றால் ராஜினாமா… அண்ணாமலை அறிவிப்பு!