பிசிசிஐயின் அடுத்த செயலாளராக ரோகன் ஜெட்லி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத், ரோகன் மீது அதிர்ச்சி ரக குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
டெல்லி மாநில கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் போட்டியிடுகின்றனர் . கடந்த நான்கு ஆண்டுகளாக ரோகன் ஜெட்லி டெல்லி மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார். மீண்டும் தற்போது தலைவர் பதவிக்கான தேர்தலில் நிற்கிறார்.
இந்த நிலையில், கீர்த்தி ஆசாத் தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி ஒன்றில் டெல்லி மாநில கிரிக்கெட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அணியில் வீரர்களை தேர்வு செய்வதாக குற்றம் சுமத்தி இருக்கிறார். இது பற்றி கூறுகையில்,’டெல்லி மாநில அணிக்காக எனது பள்ளி பருவத்தில் இருந்து விளையாடியுள்ளேன். டெல்லி கிரிக்கெட் மைதானத்துடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது.
ஆனால், இங்கு நிறைய ஊழல் நடக்கிறது. டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் இயக்குனர்களின் குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதும், ஒரு வீரரை அணியில் தேர்வு செய்வதற்கு லஞ்சம் வாங்குவதையும் பார்த்துள்ளேன். திறமையான இளம் வீரர்களுக்கு பதிலாக மற்றவர்கள் தேர்வு செய்யப்படுவது என்னை காயப்படுத்தியது” என்றார்.
கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் கீர்த்தி ஆசாத் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, திரிணாமுல் கட்சியின் எம்.பியாகவும் கீர்த்தி ஆசாத் உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்.. பூந்தமல்லி யார்டில் சோதனை ஓட்டம்!
அறப்போர் இயக்கம் மீது மானநஷ்ட வழக்கு… உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!