டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார்.
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் நேற்று (செப்டம்பர் 28) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளது.
அதேநேரத்தில், இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்களால் சமீபகாலமாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு உதாரணமாய் சமீபத்தில் நிறைவுற்ற ஆசியக்கோப்பை, ஆஸ்திரேலியா தொடர்களை அவர்கள் காரணம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 28) நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
என்னதான் இந்திய அணி சிறப்பாக பந்துவீசியபோதும், இந்தப் போட்டியில், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது ரசிகர்களுக்கு கவலையை உண்டாக்கியது.
காயத்தில் இருந்து மீண்டும் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய பும்ரா, தென்னாப்பிரிக்காவுடன் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பங்கேற்கவில்லை.
அதற்கு விளக்கம் அளித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ”பும்ராவுக்கு முதுகில் வலி பிரச்சினை இன்னும் இருக்கிறது. அதுதொடர்பாக பரிசோதனை நடந்துவருகிறது’ என்றார்.
பும்ரா பயிற்சியில் ஈடுபட்டபோது முதுகில் வலி ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபோது, மருத்துவர் இரண்டு மாத காலத்திற்கு ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.
இதையடுத்தே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் பங்கேற்பரா என சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் ஆல்ரவுண்டரான ரவிந்திர ஜடேஜா மூட்டுவலியால் டி20 தொடரில் பங்கேற்காமல் இருக்கும் நிலையில், பும்ராவும் டி 20 உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாகவே இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
முதல் டி20 : தென்னாப்பிரிக்க அணியை வேரோடு சாய்த்த இந்தியா!
டி20 தரவரிசை பட்டியல்: பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்