டி20 உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்கவில்லை.
அவருக்கு முதுகு வலி இருப்பதால் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் அகடாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இந்திய அணிக்குப் பின்னடைவாகக் கருதப்பட்டது.
பும்ரா விலகவில்லை
இதனைத் தொடர்ந்து, தென் ஆப்ரிக்கா அணியுடனான டி20 தொடரில் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் அணியில் விளையாடி வருகிறார்.
டி20 உலக கோப்பை தொடரிலும் முகமது சிராஜ் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த எதிர்பார்ப்புக்குப் பதிலளிக்கும் விதமாக டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியில் முகமது சிராஜ் இடம் பெறுவார் என்று பிசிசிஐ நேற்று (செப்டம்பர் 30) அறிவித்திருந்தது.
இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ”பும்ரா டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகவில்லை, அணியில் நீடிக்கிறார்.
அவர் டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா என்பது குறித்து 2 அல்லது 3 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளனர். அங்குப் பயிற்சிகளை மேற்கொண்டு அக்டோபர் 26 ஆம் தேதி நேரடியாக சூப்பர் 12 சுற்றில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளனர்.
மோனிஷா
விராட் கோலியின் சாதனைகள் : குறிவைத்து அடிக்கும் பாபர் அசாம்
அதிரடி பெண் எம்.பி.யின் கலக்கல் நடனம்!