ஃபிஃபா உலகக்கோப்பையில் ஜப்பான் ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்தது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மொத்தம் 34 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டிகளை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தாரில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 24 )’ஈ’ பிரிவில் நடந்த போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி- ஜப்பான் அணிகள் மோதின. கலிபா சர்வதேச மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே கோல் அடிக்க கடுமையாக போராடினர்.
ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் இல்கே குண்டோகன் கோல் அடித்து அசத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்க ஜப்பான் அணி எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி 1-0 என்ற கனக்கில் முன்னிலை பெற்றது. பின்னர், 2 வது பாதி ஆட்டம் தொடங்கியது.
ஆட்டத்தில் ஜெர்மனியே ஜெயிக்கும் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் 75வது நிமிடத்தில் ரிஸ்து டோனும், 83வது நிமிடத்தில் டகுமா ஆசானோவும் அடுத்தடுத்து கோல்கள் அடித்து ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இறுதியில், 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தியது.

இந்நிலையில், ஜெர்மனி- ஜப்பான் போட்டியை காண வந்த ஜப்பான் ரசிகர்கள் போட்டி முடிந்ததும் கால்பந்து மைதானத்தில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
போட்டியின்போது ரசிகர்கள் போட்டுவிட்டுச் சென்ற பதாகைகள், உணவு தட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினர்.
ஜப்பானியர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் கால்பந்து மைதானத்தை சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
’இதை ஏன் செய்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு, ”நாங்கள் ஜப்பானியர்கள், இந்த இடத்தை மதிக்கிறோம், பள்ளியில் இருந்தே எங்களுக்கு சுத்தம் செய்வதை பற்றிச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.
எங்கள் பின்னால் இருக்கும் குப்பைகளை அகற்றுவதே எங்களுடைய கடமை” என பதிலளித்துள்ளார் குப்பைகளை சுத்தம் செய்த ஜப்பானிய ரசிகர் ஒருவர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்