ஐபிஎல் தொடரின் 30 வது லீக் போட்டி லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 22) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
நடப்பு தொடரில் லக்னோ அணி இதுவரை 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன், 8 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கேப்டன் கே.எல். ராகுல் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தாவிட்டாலும் கைல் மேயர்ஸ், ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரான் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அதோடு, நவின் உல்-ஹக், ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் பந்துவீச்சில் எதிரணிகளை மிரட்டி வருகின்றனர்.

கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது லக்னோ அணிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது.
நடப்பு சாம்பியனான குஜராத் அணியை பொறுத்தவரை இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் அணிகளில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஒன்று.

சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்க, முகமது ஷமி, மோஹித் சர்மா மற்றும் ரஷித் கான் ஆகியோர் எதிரணியை திணறடிக்கின்றனர்.
அதேநேரம், கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியிடம் குஜராத் அணி தோல்வி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சூரத்தை தொடர்ந்து பாட்னா: மீண்டும் நீதிமன்றம் முன் நிற்கும் ராகுல்காந்தி
கோடையில் கனமழை: 15 மாவட்டங்களுக்கு நல்ல செய்தி!