ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் இன்று (மார்ச் 31) குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிறது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டிகளில் வெற்றிகரமான கேப்டன் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி சென்னை அணிக்காக இதுவரை 2010, 2011, 2018, 2021 ஆண்டுகளில் சிறப்பாக அணியை வழிநடத்தி நான்கு கோப்பைகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அதேபோல ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை ஃபிளே ஆஃப் சுற்றுக்கும்(11), இறுதிப்போட்டிக்கும்(9) தகுதி பெற்ற ஒரே அணி சென்னை தான்.
அதேநேரம், கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடினமான ஆண்டாகவே அமைந்தது. கேப்டன்சி பொறுப்பு ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அணி அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால் மீண்டும் தோனியிடமே கேப்டன்சி பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது சென்னை அணி.
இந்நிலையில், இந்த 16வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். தோனி தலைமையில் முழு பலத்துடன் களமிறங்குகிறது. தொடக்க பேட்டிங்கில் ருத்துராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தொடர்ந்து ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸின் அதிரடி அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.
அவருக்கு 4-வது இடத்தில் களமிறங்கும் அம்பதி ராயுடு உறுதுணையாக இருக்கக்கூடும். நடுவரிசையில் ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா வலுவாக உள்ளனர். 41 வயதான தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக மகுடம் சூடுவதில் தீவிரம் காட்டுவார் என எதிர்பாக்கப்படுகிறது.
பந்து வீச்சில் தீபக் சாஹர் அணிக்கு திரும்பி இருப்பது வலு சேர்த்துள்ளது. தொடக்க ஓவர்களில் அவரது ஸ்விங் பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
மகேஷ் தீக்ஷனா, சிசன்டா மகலா, முகேஷ் சவுத்ரி, மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்டோரும் பந்து வீச்சில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் 7 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடது கை வீரர்களாக உள்ளனர். இது எதிரணியின் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் பாதி போட்டியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்குவார் என்று கூறப்படுவதால் வேகப்பந்து வீச்சில் சற்று தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.
ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தவாறு மாய சுழல், ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், இடது கை விரல் ஸ்பின் என சுழற்பந்து வீச்சில் உள்ள அனைத்து வகைகளையும் கையாளக்கூடிய வீரர்களை கொண்டுள்ளது. இதனால் இந்த சீசனில் அசுர பலத்துடன் சென்னை சூப்பர் சிங்ஸ் அணி களமிறங்கவுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறு முதல் போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது.
சென்னை அணி வீரர்கள் விவரம்
தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்சு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரினா, மதீஷா சௌத்ரி , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, சிசண்டா மகலா, அஜய் மண்டல், பகத் வர்மா.
மு.வா.ஜெகதீஸ் குமார்