T20 WorldCup 2022: நெதர்லாந்தை சுருட்டி வீசி முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா!

T20 விளையாட்டு

நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் முன்னணி வீரர்களின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா நெதர்லாந்து அணிகள் இன்று (அக்டோபர் 27) சூப்பர் 12 சுற்றில் மோதின.

மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததை அடுத்து சிட்னி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

முதல் 2 ஓவர்களில் வழக்கம்போல் பொறுமையாக ஆடிய ராகுல், 3வது ஓவரில் வான் மீக்ரன் பந்துவீச்சில் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதனைதொடர்ந்து ரோகித்துடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார். மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததை தொடர்ந்து இருவரும் மெதுவாகவே ரன் சேர்த்தனர்.

இதனால் இந்திய அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் மட்டுமே அடித்தது. இதற்கிடையே 35 பந்துகளில் அரை சதம் அடித்த ரோகித் சர்மா 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கோலி – சூர்யகுமார் ஜோடி அபாரம்!

பின்னர் விராட் கோலியுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நெதர்லாந்து பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரி சிக்ஸர்களாக பறக்கவிட்டனர்.

நல்ல பார்மில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் கோலி பாகிஸ்தானை தொடர்ந்து இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார்.

இதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் அரைசதம் நோக்கி தனது பேட்டை சுழற்றினார்.

கடைசி ஓவரில் அவர் அரைசதம் அடிக்க 8 ரன்கள் இருந்த நிலையில், முதல் இரண்டு பந்துகளில் 3 அடிக்க, ஸ்ட்ரைக் விராட்கோலி பக்கம் சென்றது. எனினும் 5 வது பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்த கோலி, ஸ்ட்ரைக்கை சூர்யகுமார் யாதவுக்கு கொடுத்தார்.

இதனால் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து டி20 போட்டியில் தனது 10வது அரைசதம் அடித்தார் சூர்யகுமார் யாதவ்.

இந்த போட்டியில் அதிரடியாக விராட் கோலி – சூர்ய குமார் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் குவித்தது. இது டி20 போட்டியில் இந்த ஜோடியின் 4வது சிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும்

அத்துடன் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 179 ரன்கள் குவித்தது.

இதனைதொடர்ந்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணியில் விக்ரமஜித் சிங் மற்றும் மேக்ஸ்டி ஓவ்டு ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

நெதர்லாந்து தடுமாற்றம்!

எனினும் இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் நெதர்லாந்து அணி ஆரம்பம் முதலே திணறியது.

தனது முதல் இரண்டு ஓவர்களை மெய்டனாக வீசிய புவனேஷ்வர் குமார் விக்ரமஜித் சிங்கை 1 ரன்னுக்கு போல்டாக்கி வெளியேற்றினார்.

பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்களின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறிய நெதர்லாந்து அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் மட்டுமே அடித்தது.

இந்தியா அபார வெற்றி!

அடுத்து வந்த வீரர்களும் மைதானத்தில் நுழைந்து உடனடியாக பெவிலியனுக்கு திரும்பிய வண்ணம் இருந்தனர்.

இதனால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி 123 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், அக்சர் பட்டேல், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்.

புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சில் நிலைகுலைந்த நெதர்லாந்து அணியில் ஒரு வீரர் கூட 20 ரன்களை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் விராட் கோலியுடன் இணைந்து 25 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தொடர்ந்து 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய அணி குரூப் 2 பிரிவில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

மருது சகோதரர்கள் குருபூஜை: மாஸ் காட்டிய ஓ.பி.எஸ்

சமந்தாவுக்காக சம்மதித்த ஐந்து ஹீரோக்கள்!

+1
1
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *