இந்தியா பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், காஷ்மீர் என்.ஐ.டி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எப்போதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. இருநாட்டுக்கும் இடையே இருக்கும் அரசியல் சூழலும் இதற்கு ஒரு காரணமாகும்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இருநாட்டுக்கும் இடையேயான நேரடி போட்டி கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. ஐ.சி.சி, உலக கோப்பை, ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே இந்த இரு அணிகளும் மோதுகின்றன.
அதன்படி இன்று துபாயில் நடைபெறும் 2-ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் களம் காண்கிறது. இந்த நிலையில் காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள என்.ஐ.டி.நிர்வாகம் தங்களது மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், போட்டி நடைபெறும் போது மாணவர்கள், போட்டி தொடர்பாக எந்த பதிவுகளையும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது. போட்டி நடைபெறும் சமயத்தில் மாணவர்கள் தங்களது அறைகளை விட்டு வெளியே வரக் கூடாது.
அதுபோன்று மற்ற மாணவர்கள் குழுவினரை உள்ளே அனுமதிக்கக் கூடாது. மாணவர்கள் குழுவாக ஒன்று சேர்ந்து அறையில் அமர்ந்துகொண்டு போட்டியைக் காணக் கூடாது.
ஒருவேளை குழுவாக எதாவது ஒரு அறையில் போட்டியைக் காண்பது தெரியவந்தால், அவர்கள் ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ரூ.5000 அபராதமும் விதிக்கப்படும்.
போட்டி நடைபெறும்போதோ அதற்குப் பின்னரோ வெளியே செல்லக் கூடாது” என்று எச்சரித்துள்ளது.
இது மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா