ஹைதராபாத் அணி என்னை ஏலத்தில் எடுத்தவுடன் எனது அம்மா மற்றும் பாட்டி ஆகிய இருவரும் அழுதுவிட்டார்கள் என்று இங்கிலாந்து அணி வீரர் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் நேற்று (டிசம்பர் 23) நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி புரூக் 13.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
சாம் கர்ரன், பென் ஸ்டோக்சிற்கு அடுத்தபடியாக அதிக தொகையில் ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணி வீரராக ஹாரி புரூக் உள்ளார்.
ஐதராபாத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது குறித்து கூறும்போது, “ஹாய் ஆரஞ்சு ஆர்மி, இந்த ஆண்டில் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுவதற்காக நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் எனது அம்மா மற்றும் பாட்டியுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
அப்போது ஹைதராபாத் அணி என்னை ஏலத்தில் எடுத்தவுடன் அவர்கள் அழுதுவிட்டார்கள். எனக்கு சொல்ல வார்த்தைகள் எதுவும் இல்லை. ஹைதராபாத் அணிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாரி புரூக் மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் உள்பட 468 ரன்கள் அடித்து அசத்தினார். அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சன் ரைசஸ் ஹைதராபாத் அணி இதுவரை 9 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ஹெய்ன்ரிச் க்லாசன், அதில் ரஷித், மயங்க் மார்கண்டே, விவ்ராந்த் ஷர்மா, சமர்த் வியாஸ், சன்விர் சிங், உபேந்திர யாதவ் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
செல்வம்
எம்ஜிஆர் நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி மரியாதை!
ஓட்டுநர் டூ கோடீஸ்வரர்: துபாயில் இந்தியருக்கு அடித்த லாட்டரி!