ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று(மே26) நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குஜராத் அணி.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2வது குவாலிஃபயர் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இதில், முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்நிலையில், குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். 16 பந்துகளை எதிர்கொண்ட சாஹா 3 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இருவரும் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து களத்திற்கு வந்த சாய் சதர்சனுடன் இணைந்து சுப்மன் கில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் பறக்க அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. 49 பந்துகளை எதிர்கொண்ட சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்த கில் 60 பந்துகளில் 10 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தபோது சாய் சுதர்சன் ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 13 பந்துகளில் 2 சிக்சர் 2 பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி 233 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி மும்பை அணியின் வீரர்கள் களத்தில் இறங்கினர்.
அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்னிலும், நெஹல் வதேரா 4 ரன்னிலும் ஆட்டமிழக்க சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேமரூன் கிரீன் 20 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். திலக் வர்மா – சூர்ய குமார் யாதவ் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
14 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் திலக் வர்மா 43 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ரன்களை சேர்த்த சூர்யகுமார் யாதவ் 38 பந்தில் 2 சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகள் அடித்து 61 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்தவர்களில் விஷ்ணு வினோத் 5 ரன்னும், டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டன் தலா 2 ரன்களும், பியூஷ் சாவ்லா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
18.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மாமன்னன் அப்டேட்: நாளை வெளியாகும் “ஜிகு ஜிகு ரயில்”
செங்கோலை வழங்கிய போது என்ன நடந்தது? திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம்!