கத்தாரில் நடைபெறும் 22வது உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஈகுவடார் அணி வெற்றிபெற்றது.
22 வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா அரபு நாடான கத்தாரில் நேற்று (நவம்பர் 20) கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடர், டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்தைய நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் தொடக்க நாளான நேற்று ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள போட்டியை நடத்தும் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதின.
இதில் ஆரம்பம் முதலே அதிரடி தாகுதலை தொடுத்த ஈகுவடார் அணி அபாரமாக ஆடியது. அந்த அணிக்கு ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, என்னர் வலென்சியா கோலாக்கினார்.
இதனால் ஈகுவடார் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
இதையடுத்து 31வது நிமிடத்தில், வலென்சியா மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அந்த அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டாலும் இறுதியில் கோல் அடிக்க இயலவில்லை. இதையடுத்து, ஈகுவடார் அணி முதல் பாதியில் அடித்த இரண்டு கோல்களின் அடிப்படையில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஜெ.பிரகாஷ்