ஃபிஃபா உலக கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதால், காலிறுதி போட்டியில் மோதும் அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.
22-வது ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 16 அணிகள் மோதின. இதில் 8 அணிகள் தற்போது காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டத்தில், போர்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தியதன் மூலம், காலிறுதி போட்டியில் மோதும் அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற முன்னணி அணிகள் குரூப் சுற்றுகளில் வெளியேற்றப்பட்டன. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 2010-ஆம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின் அணி, மொரோக்கோ அணியிடம் தோல்வி அடைந்தது.
பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல் மற்றும் இங்கிலாந்து போன்ற ஜாம்பவான் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதி போட்டியில் மோதும் 8 அணிகளில் 4 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் என்பதால் ரசிகர்களுக்கு பரபரப்பான ஆட்டம் காத்திருக்கிறது.
காலிறுதிப் போட்டி அட்டவணை:
டிசம்பர் 9-ஆம் தேதி, இரவு 8.30 மணியளவில் குரோஷியா – பிரேசில் அணிகள் எஜுகெஷன் சிட்டி மைதானத்தில் மோத உள்ளன.
டிசம்பர் 10-ஆம் தேதி, இரவு 8.30 மணிக்கு அல் துமாமா மைதானத்தில் போர்ச்சுகல், மொரோக்கா அணிகள் மோதுகின்றன.
மற்றொரு போட்டியில், நள்ளிரவு 12.30 மணியளவில் லுசைல் மைதானத்தில் நெதர்லாந்து – அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
டிசம்பர் 11-ஆம் தேதி, நள்ளிரவு 12.30 மணியளவில் அல் பேட் மைதானத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதும் காலிறுதி போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது,
காலிறுதி போட்டியில் வெற்றி பெறும் நான்கு அணிகள் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அரையிறுதிப்போட்டிகளில் மோதுகின்றன. அதில் வெற்றி பெறும் அணிகள் டிசம்பர் 18-ஆம் தேதி இறுதிப்போட்டியில் மோத உள்ளன.
செல்வம்