ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதற்கு தான் சாப்பிட்ட மலிவு விலை கோழிக்கறி தான் காரணம் என்று நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல தடகள வீரர் சாலமன் பொக்காரி. ஆப்பிரிக்காவில் உள்ள சியாரா லியோன் நாட்டில் பிறந்த 35 வயதான சாலமன் கடந்த 2015ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் குடியேறினார்.
தொடர்ந்து அந்நாட்டு சார்பாக கடந்த 2016ம் ஆண்டு நடந்த ரியோ மற்றும் 2020ம் ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்.
இந்லையில் கடந்த மாதம் சாலமனுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில் தடைசெய்யப்பட்ட GHRP-2 ஹார்மோன் அவரது உடலில் அதிகப்படியாக இருப்பது உறுதியானது.
இதனையடுத்து தான் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதற்கான காரணமாக அவர் தெரிவித்த தகவல் விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊக்கமருந்து சோதனைக்கு முன்னதாக கடையில் இருந்து மலிவு விலையில் சிக்கன் வாங்கி சாப்பிட்டதாகவும்,
அதன்மூலம் தான் தனது உடலில் தடைசெய்யப்பட்ட ஹார்மோன் வளர்ச்சி அதிகரித்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ”GHRP-2 ஹார்மோன் என் உடலில் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துவதற்கு நான் எப்போதும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளேன்.
தற்போது நடத்தப்பட்ட சோதனையில் எனக்கு சந்தேகங்கள் உள்ளன. ஒரு தடகள வீரராக எனது உடலில் காணப்படும் மாற்றங்களுக்கு எல்லா நேரங்களிலும் நான் தான் பொறுப்பு.
அதே வேளையில் நான் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
“இந்த கோழிக்கு ஹார்மோன்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கலாம், மேலும் இந்த கோழியை சாப்பிட்டதால் சாலமன் உடலில் இந்த ஹார்மோன் கிடைத்திருக்கலாம்.
அதிர்ஷ்டவசமாக, அவர் இன்னும் இந்த சிக்கன் எலும்பு துண்டுகளை வீட்டில் வைத்திருக்கிறார்.
இந்த வழியாகத்தான் சாலமனின் உடலில் தடைசெய்யப்பட்ட ஹார்மோன் நுழைந்தது என்பதைக் காட்ட நாங்கள் அதை ஆய்வு செய்ய முயற்சிப்போம்.”
என்று பொக்காரியின் செய்தித் தொடர்பாளர் ராபின் பீட்டர்மேன் என்பவர் தெரிவித்துள்ளார்
கிறிஸ்டோபர் ஜெமா
ஊக்கமருந்து பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை தேவை : பி.டி. உஷா எம்.பி!