சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – டெல்லி கேப்பிடல்ஸ் போட்டிக்காக நாளை (மே 8) நடைபெறும் டிக்கெட் விற்பனையில் சிஎஸ்கே நிர்வாகம் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடப்பு சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஐபிஎல் போட்டிகளுக்கு டிக்கெட் வாங்குவது குறித்து பல்வேறு புகார்கள் வந்தன.
இரவு முழுவதும் டிக்கெட் வாங்க காத்திருக்கும் பெரும்பாலான ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. மாறாக பிளாக்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுகிறது. மேலும் டிக்கெட் விற்பதில் எந்த ஒழுங்குமுறையும் பின்பற்றபடாத நிலையில் போலீஸாரின் தடியடி சம்பவங்களும் ஏற்படுகிறது.
இந்நிலையில் வரும் 10ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இதற்கான டிக்கெட் விற்பனை நாளை (மே 8) நடைபெறுகிறது. இந்நிலையில் டிக்கெட் வாங்குவதற்காக வரும் ரசிகர்களுக்கு ஏதுவாக சில மாற்றங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, வழக்கமாக காலை 9.30மணிக்கு தொடங்கும் டிக்கெட் விற்பனை நாளை காலை 7 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரூ.2,000, ரூ.2500 டிக்கெட்டுகளுக்கு மகளிருக்கென தனி வரிசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத் திறனாளிகள் காலை 10.30 முதல் 11 மணி வரை ரூ.2,500 டிக்கெட்டை பெற்று கொள்ளலாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா