நட்சத்திர கால்பந்தாட்ட வீரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸார் அணிக்காக 200 மில்லியன் யூரோவிற்கு, (இந்திய மதிப்பில் ரூ.1,775 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணிக்காக விளையாடும் ரொனால்டோ, ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடைட், ஜுவாண்டஸ் உள்ளிட்ட கிளப் அணிக்காக விளையாடி வந்தார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மான்செஸ்டர் யுனைடைட் அணி ரொனால்டோவை ஒப்பந்தத்திற்கு எடுத்தது.

இந்தநிலையில், பியர்ஸ் மோர்கனுடனான தொலைக்காட்சி நேர்காணலில் மான்செஸ்டர் யுனைடைட் தலைமை பயிற்சியாளர் எரிக் டென்னுக்கும் ரொனால்டோவிற்குமான பிரச்சனை குறித்து பேசியிருந்தார்.
அதில், “எரிக் டென் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார். அவர் கால்பந்தாட்டத்தில் ஆடுவதை முடித்து விட்டார். நான் தொடர்ந்து விளையாடி வருவதால் என்னை இவ்வாறு விமர்சிக்கிறார். அதனால் நான் அவரை விட சிறந்தவன் என்று கூறவில்லை.” என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து ரொனால்டோவை மான்செஸ்டர் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று பயிற்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து ஒப்பந்தத்திலிருந்து ரொனால்டோவை மான்செஸ்டர் யுனைடட் அணி வெளியேற்றியது.
இதனால் ரோனால்டோ எந்த கிளப்பிற்காக விளையாடுவார் என உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.
இந்தநிலையில், 2025-ஆம் ஆண்டு ஜீன் மாதம் வரை சவுதி அரேபியாவின் அல் நஸார் அணிக்கு விளையாடுவதற்கு ஆண்டிற்கு 200 மில்லியன் யூரோ, இந்திய மதிப்பில் ரூ.1,775 கோடிக்கு ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மஞ்சள் நீலம் கலந்த அல் நஸார் அணியின் டீ சர்ட் உடன் ரொனால்டோ இருக்கும் புகைப்படத்தை அந்த அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மேலும், “வரலாறு உருவாகிறது. ரோனால்டோவின் கையொப்பம் எங்கள் கிளப்பை இன்னும் பெரிய வெற்றியடைய ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் நமது தேசம், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிப்பதாக அமையும். அல் நஸார் அணியின் புதிய வீட்டிற்கு உங்களை வரவேற்கிறோம் ரொனால்டோ.” என்று தெரிவித்துள்ளது.
மெஸ்ஸி தலைமையிலான பிஎஸ்ஜி அணி வரும் ஜனவரி மாதத்தில் சவுதி அரேபியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அல் ஹிலால் மற்றும் அல் நஸார் அணியுடன் விளையாட உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி உலக கோப்பையை கைப்பற்றியது. காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி மொரோக்கா அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இதனால் உலக கோப்பை போட்டியில் மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் மோதுவார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்து போனது. தற்போது இரண்டு வீரர்களும் ஜனவரி மாதத்தில் ஆடுவார்கள் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
செல்வம்
ஊர்வசியின் இன்ஸ்டாகிராம் பதிவு: கடுப்பான ரிஷப் பண்ட் ரசிகர்கள்!