ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை வீழ்த்தி இரண்டாவது வெற்றியோடு சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
15ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள ஆறு அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ-பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி-பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வோர் அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.
இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 31) இரவு துபாயில் நடந்த நான்காவது லீக் ஆட்டத்தில் இந்தியா – ஹாங்காங் அணிகள் மோதின. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்.
‘டாஸ்’ ஜெயித்த ஹாங்காங் கேப்டன் நிஜாகத்கான் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி கேப்டன் ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.
தொடக்க ஜோடி ஐந்தாவது ஓவரில் பிரிந்தது. ஆயுஷ் சுக்லாவின் பந்து வீச்சில் சிக்சர் அடித்த ரோஹித் சர்மா (21 ரன், 13 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவரது அடுத்த பந்தையும் சிக்சருக்கு முயற்சி செய்தார்.
ஆனால், இந்த முறை மெதுவாக வீசியதால் சரியாக ‘கிளிக்’ ஆகாத பந்து அய்ஜாஸ் கானிடம் கேட்ச் ஆனது.
இரண்டாவது விக்கெட்டுக்கு வந்த விராட் கோலி துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினார். ஆனால், இன்னொரு பக்கம் கே.எல்.ராகுல் மந்தமாகவே ஆடினார். முதல் 10 ஓவர்களில் இந்தியா 70 ரன்களே எடுத்திருந்தது. ஸ்கோர் 94 ஆக (13 ஓவர்) உயர்ந்தபோது ராகுல் 36 ரன்களில் (39 பந்து, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.
இதைத் தொடர்ந்து விராட் கோலியுடன், சூர்யகுமார் யாதவ் கைகோத்தார். அதன் பிறகே ஆட்டம் சூடு பிடித்தது. தடாலடியான பேட்டிங்கால் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. கோலி தனது 31ஆவது அரை சதத்தை எட்டினார்.
வேகப்பந்து வீச்சாளர் ஹரூன் அர்ஷாத் வீசிய கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிரமாதமான 4 சிக்சர்களைப் பறக்க விட்டு பரவசப்படுத்தினார். அத்துடன் 22 பந்துகளில் தனது ஆறாவது அரை சதத்தையும் நிறைவு செய்தார்.
டி20 போட்டியில் அவரது அதிவேக அரை சதம் இதுவாகும். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா இரண்டு விக்கெட்டுகளுக்கு 192 ரன்கள் குவித்தது.
நடப்பு தொடரில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் (26 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), விராட் கோலி 59 ரன்களுடனும் (44 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். இவர்கள் மூன்றாவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் (45 பந்து) விளாசியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பின்னர் மெகா இலக்கை நோக்கி ஆடிய ஹாங்காங் பேட்ஸ்மேன்கள் முடிந்தவரை போராடி பார்த்தனர். பாபர் ஹயாத் (41 ரன், 35 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கின்சித் ஷா (30 ரன்), ஜீஷன் அலி (26 ரன்) ஆகியோரின் பேட்டிங் குறிப்பிடும்படி இருந்தது.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய அந்த அணி 5 விக்கெட்டுகளுக்கு 152 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்றாலும் மெத்தனபோக்கு காரணமாக இந்திய பவுலர்கள் கடைசி 2 ஓவர்களில் 33 ரன்களை வாரி வழங்கினர்.
புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ்கான், ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். ஏற்கனவே பாகிஸ்தானை வீழ்த்தியிருந்த இந்தியாவுக்கு இது இரண்டாவது வெற்றியாகும். 4 புள்ளிகளுடன் ஏ-பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறியது.
இந்தப் பிரிவில் கடைசி லீக்கில் பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் நாளை மோதுகின்றன. இதில் வெற்றி காணும் அணி ஏ-பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 சுற்றை அடையும்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய கேப்டன்களில் அதிக வெற்றியை தேடித் தந்தவர்களின் பட்டியலில் டோனி (72 ஆட்டத்தில் 41 வெற்றி) முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனை வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த விராட் கோலியை நேற்று ரோஹித் சர்மா முந்தினார். கோலி தலைமையில் இந்தியா 50 ஆட்டங்களில் ஆடி 30 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா 37 ஆட்டங்களில் 31இல் வெற்றிகளை குவித்துள்ளது. பேட்டிங்கில் முத்திரை பதித்த இந்திய வீரர் விராட் கோலிக்கு திடீரென பந்து வீசுவதற்கு கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கினார். ஆட்டத்தின் 17ஆவது ஓவரை விராட் கோலி வீசினார். ஒரு ஓவர் வீசிய அவர் 6 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் பி-பிரிவில் வங்காள தேச அணியும், இலங்கை அணியும் இன்று (செப்டம்பர் 1) மோதுகின்றன. இதில் வெற்றி காணும் அணி பி-பிரிவில் இருந்து இரண்டாவது அணியாக சூப்பர் 4 சுற்றை அடையும்.
-ராஜ்
ஆசிய கோப்பை : ஹாங்காங்கை பந்தாடிய கோலி, சூர்ய குமார்!