காமன்வெல்த் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி பி.வி.சிந்து, மன்ப்ரீத் சிங் இருவரும் தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.
காமன்வெல்த் ஜோதி, பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் மைதானத்துக்கு வந்து சேர்ந்ததை தொடர்ந்து, காமன்வெல்த் போட்டிகள் 2022 தொடங்கியதாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதன் தொடக்க விழா அணிவகுப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். அதன்படி, தொடக்க விழா அணிவகுப்புக்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றனர்.
இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி, காமன்வெல்த் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடக்கிறது.
– ராஜ்