44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 5வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா ஸ்பெயின் வீரரிடம் தோல்வி அடைந்துள்ளார்.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்திய அணி தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறது.
முதல் மூன்று சுற்றுகளிலும் நம்முடைய 6 அணிகளும் தோல்வியே தழுவாமல் வெற்றிபெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற 4வது சுற்றில், தடுமாற்றம் கண்டன.
ஓபன் பிரிவில் இந்திய சி அணி ஸ்பெயினிடம் 1.5-2.5 என புள்ளிக்கணக்கில் தோற்றது. இந்திய ஏ அணி பிரான்ஸிடம் 2-2 என டிரா செய்தது.
இந்திய பி அணி மட்டும் இத்தாலியை 3-1 என வீழ்த்தியது. மகளிர் பிரிவில் ஜார்ஜியாவுக்கு எதிராக இந்திய சி அணி, 1-3 எனத் தோற்றது.
ஹங்கேரி, ஈஸ்டோனியா அணிகளை இந்திய ஏ, இந்திய பி அணிகள் தலா 2.5-1.5 என வீழ்த்தின.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்ற 5வது சுற்றுக்கான போட்டியில், இந்திய மகளிர் அணி சி பிரிவில் களமிறங்கிய தமிழக வீராங்கனை நந்திதா, பிரேசில் வீராங்கனையை 32வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.
அதுபோல் இந்திய வீரர் அபிமன்யு வெற்றி பெற்றார். அதுபோல் இந்திய ஓபன் பி பிரிவில் பங்கேற்ற தமிழக வீரர் அதிபன், ஸ்பெயின் வீரர் பொனோலி எடுராடோவை 47வது நகர்த்தலில் வென்றார்.
அதே பி பிரிவில் அங்கம் வகித்த மற்றொரு தமிழக வீரர் குகேஷ், ஸ்பெயின் அணி வீரரான ஷிலோவ் அலெக்சியை 44வது நகர்த்தலில் வென்றார்.
அதேநேரத்தில், 5வது சுற்றில் விளையாடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.
அவர் 85வது நகர்த்தலில் ஸ்பெயின் வீரர் சாண்டோஸ் லடாசாவிடம் வீழ்ந்தார்.
அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா ஆகிய மூவரில் பிரக்ஞானந்தா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அவர் தோல்வியைத் தழுவியிருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.பிரகாஷ்
காமன்வெல்த்: லான் பவுல்ஸ் போட்டியில் முதல் தங்கப் பதக்கம்!