ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சிஎஸ்கே:ரசிகர்கள் உற்சாகம்!

Published On:

| By Jegadeesh

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று(மே20) நடைபெற்ற இந்த தொடரின் 67 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதின.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர்.

இருவருமே தங்களின் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்த சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இவர்களது பார்ட்னர்ஷிப் முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. இதில் 50 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் 7 சிக்சர் 3 பவுண்டரியுடன் 79 ரன்கள் குவித்தார்.
52 பந்துகளை எதிர்கொண்ட கான்வே 3 சிக்சர் 11 பவுண்டரியுடன் 87 ரன்கள் எடுக்க அடுத்து வந்த ஷிவம் துபே 3 சிக்சருடன் 9 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.

அதிரடியாக விளையாடிய ஜடேஜா 7 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 20 ரன்களும், தோனி 5 ரன்களும் எடுக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது டெல்லி கேபிடல்ஸ்.

அந்த அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 5 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பிலிப் சால்ட் 3 ரன்னும், ரிலீ ரூசோ ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். யஷ் துலி 13 ரன்களும், அக்சர் படேல் 15 ரன்களும் சேர்த்தனர்.

விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் கேப்டன் டேவிட் வார்னர் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தார். 58 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அமான் ஹகிம் 7 ரன்களும், லலித் யாதவ் 6 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.


இதையடுத்து 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் இரண்டாவது அணியாக நுழைந்துள்ளது சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

முன்னதாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மதுவை விற்று சம்பாதிக்கும் திமுக அரசு: அண்ணாமலை சாடல்!

சிஎஸ்கே வீரர்களை சூழ்ந்த ரசிகர்கள்:வைரல் வீடியோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share