உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வென்றால் தனக்கு வருத்தம் தான் என்று பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பெல்ஜியம், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட ஜாம்பவான்கள் நிறைந்திருந்த அணிகள் குரூப் மற்றும் நாக் அவுட் சுற்றுகளோடு வெளியேறின.
அதேபோல் ஆசிய அணிகளான ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய அணிகள் நாக் அவுட் சுற்றிலும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின.
அதேபோல் கோப்பையை வெல்லும் அணி என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் மற்றும் இங்கிலாந்து அணிகள் காலிறுதி சுற்றோடு வெளியேறின.
குறிப்பாக பிரேசில் அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியாவிடம் தோல்வியடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்கா நாடு என்ற சாதனையை மொராக்கோ படைத்துள்ளது.

இந்நிலையில், பிரேசில் அணியின் தோல்வி குறித்து முன்னாள் ஜாம்பவான் ரொனால்டோ கருத்து தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு பிரேசில் அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ரொனால்டோ.
பிரேசில் தோல்வி குறித்து ரொனால்டோ கூறுகையில், பிரேசில் அணி காலிறுதி சுற்றோடு வெளியேறியது அதிர்ச்சியாகவே இருக்கிறது. அதேபோல் அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியதும் அதிர்ச்சியாக உள்ளது.
ஏனென்றால் அர்ஜென்டினா அணி இன்னும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஆட்டத்தை விளையாடவில்லை. ஆனால் கனவுகளை சுமந்து விளையாடி வருகின்றனர். இதயத்தை ஆட்டத்தில் வைத்து விளையாடுகின்றனர்.
அதேபோல் லயோனல் மெஸ்ஸி அனைத்து ஆட்டத்திலும் தீர்க்கமாக ஆடுகிறார். அதேபோல் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றால், நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று சொல்வது பொய் தான். அர்ஜென்டினா கோப்பையை வெல்வது எனக்கு சோகம்தான் என்று தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்