இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்த விருப்பமில்லை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஐசிசிக்கு தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான வங்கதேசத்தில் வரும் அக்டோபர் மாதத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்திருந்தது.
இதற்கிடையே வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரத்தால் பெரும் பதற்றம் நிலவிவரும் நிலையில், அக்டோபரில் அங்கு திட்டமிட்டபடி மகளிர் டி20 உலக கோப்பை தொடரை நடத்த ஐசிசி விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்துமாறு பிசிசிஐ-யிடம் ஐசிசி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை நடத்தப்படாது என்று தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “வங்கதேச கலவரத்தை தொடர்ந்து, மகளிர் உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்துவது குறித்து ஐசிசி கேட்டது. ஆனால் அக்டோபர் மாதம் இந்தியாவில் மழைக்காலம் என்பதால் போட்டியை நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் அடுத்த ஆண்டு ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. இதனால், அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை நடத்தும் எண்ணம் இல்லை.
அதேபோல், இந்தியாவில் பிங்க் பால் (இரவு நேர டெஸ்ட்) போட்டிகளையும் நடத்த போவது இல்லை. பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் 2 நாட்களில் முடிவடைந்துவிடும். இதனால், பார்வையாளர்களும், ஒளிப்பரப்பாளர்களும் பணத்தை இழக்கிறார்கள். ரசிகர்கள் 5 நாட்கள் டெஸ்ட் போட்டியை பார்க்க டிக்கெட் வாங்குகிறார்கள். இரண்டு நாட்களில் போட்டி முடிவடைந்தால், அவர்களுக்கு பணம் திருப்பி தரவேண்டிய நடைமுறை ஏற்படும்” என ஜெய் ஷா தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”டிராவிட்டைப் போல் பயிற்சியளிக்க வேண்டும்”: ஸ்ரீஜேஷ் விருப்பம்!