கோலி செய்த தவறு: குற்றம்சாட்டிய வங்கதேச வீரர்!

T20 விளையாட்டு

டி20 உலகக்கோப்பையில் நவம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 35வது லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அடிலெய்ட் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்களான கே.எல்.ராகுல் 50 (32) ரன்களும், விராட் கோலி 64* (44) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் 184/6 ரன்கள் சேர்த்தது.

அதைத்தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வங்கதேச அணி.

7 ஓவர்களிலேயே 66/0 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் தடைப்பட்டது. அப்போது, வங்கதேசம் டிஎல்எஸ் விதிமுறைப்படி 17 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது. அப்போது மழையால் 16 ஓவரில் வங்கதேசத்துக்கு 151 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோது 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் மிரட்டிய லிட்டன் தாஸை 60 (27) ரன்களில் கே.எல்.ராகுல் ரன் அவுட் செய்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

வங்கதேச ரசிகர்களின் ஆதங்கம்

ஆனாலும் கடைசி நேரத்தில் நுருல் ஹசன் 25* (14) ரன்களும் தஸ்கின் அஹ்மத் 12* (7) ரன்களும் எடுத்து வெற்றிக்காக போராடிய நிலையில், வங்கதேசத்திற்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தடுமாறினாலும் கடைசி ஓவரில் கச்சிதமாக செயல்பட்ட அர்ஷிதீப் சிங் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்தியாவுக்கு த்ரில் வெற்றியை பெற்று கொடுத்தார். அதனால் 4 போட்டிகளில் 3 வெற்றியை பதிவு செய்த இந்தியா அரை இறுதி வாய்ப்பை நெருங்கியுள்ளது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விராட் கோலி ஒரு பவுன்சர் பந்தை நோ-பால் எனக் கேட்ட போதும், மழையின் ஈரப்பதம் குறித்து வங்கதேச கேப்டன் பேசிய போதும் நடுவர்கள் இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட்டதாக வங்கதேச ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

bangladeshs nurul hasan accuses

நூருல் ஹசனின் குற்றச்சாட்டு

இந்நிலையில், மழைக்குப் பின் வங்கதேச அணியினர் பரபரப்பாக ரன்கள் எடுத்துக் கொண்டிருந்த போது விராட் கோலி போலியான பீல்டிங் செய்து தங்களை ஏமாற்றியதாக வங்கதேச வீரர் நூருல் ஹசன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதாவது வங்கதேசம் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 7 வது ஓவரின் 3 வது பந்தை எதிர்கொண்ட லிட்டன் தாஸ் டீப் ஆஃப் சைட் திசையில் அடித்தார். அதை பவுண்டரி எல்லையின் அருகே நின்ற அக்சர் பட்டேல் தடுத்து நிறுத்தி தூக்கி எறிந்தார்.

பாயிண்ட் பீல்டிங் இடத்தில் நின்ற கோலி

அப்போது பாயிண்ட் ஃபீல்டிங் இடத்தில் நின்று கொண்டிருந்த விராட் கோலி, அதைப் பிடித்து எதிர்ப்புறம் அடிப்பது போல் போலியான பீல்டிங் செய்தார். ஆனால் கிரிக்கெட் விதிமுறைப்படி அது போன்ற போலியான ஃபீல்டிங் செய்தால் பெனால்ட்டியாக 5 ரன்கள் வழங்க வேண்டும் என்ற நிலைமை இருந்தும் நடுவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதாக நூருல் ஹசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒருவேளை அது கிடைத்திருந்தால் தாங்கள் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கும் நிலையும் வந்திருக்காது என்று கூறும் அவர், இது பற்றி நேற்று (நவம்பர் 2 ) பேசியதாவது:

”மழைக்குப்பின் போட்டியில் ஈரப்பதமாக இருந்ததை நாம் அனைவரும் பார்த்தோம். இதைப் பற்றி நாம் பேசும் போது அந்த போலியான தூக்கி எறிதலையும் (ஃபேக் த்ரோ) பேச வேண்டியுள்ளது. அந்த இடத்தில் 5 ரன்கள் பெனால்டி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடந்தால் போட்டி எங்களது பக்கம் வந்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை” என்று கூறினார்.

ஹர்ஷா போக்லே பதிலடி

ஆனால் அந்த தருணத்தில் பந்தை எடுத்த அக்சர் படேல் பந்து வீசும் பகுதியை நோக்கி ஓடி வந்த பேட்ஸ்மேனை பார்த்து தூக்கி எறிந்தார். அதே சமயம் விக்கெட் கீப்பர் திசையை நோக்கி ஓடிய பேட்ஸ்மேனை பார்த்து போலியாக பந்தை தூக்கி எறிவது போல் விராட் கோலி ஃபீல்டிங் செய்தார்.

ஆனால் முதல் ஃபீல்டர் எந்த திசையில் பந்தை எறிகிறாரோ அதன் குறுக்கே நின்று தான் மற்றொரு ஃபீல்டர் போலியான ஃபீல்டிங் செய்யக்கூடாது என்பது அடிப்படை விதிமுறையாகும்.

அதன்படி அந்த இடத்தில் விராட் கோலியின் மீது தவறு இல்லாததால் நடுவர்கள் தண்டனை கொடுக்கவில்லை என்று ஹர்ஷா போக்லே உள்ளிட்ட இந்தியர்கள் இதற்கு பதிலடி கொடுக்கிறார்கள்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நகர சபையா? திமுகவின் நாடக சபையா?: மநீம கேள்வி!

ராஜ ராஜ சோழன் சதயவிழா: 48 பொருட்களால் பேரபிஷேகம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *