வங்கதேசத்துக்கு எதிராக நடந்து முடிந்த கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களும் ரவிச்சந்திரன் அஷ்வின் 42 ரன்களும் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்த ஆட்டத்தில் அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்றது ரசிகர்களுக்கு பெருமையாகவும் அமைந்தது. விராட் கோலி 1 ரன்னில் அவுட்டான போது மற்றொரு இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெயதேவ் உனட்கட் பேட்டிங் செய்ய வந்தது ஆரம்பத்திலேயே இந்தியா பயந்து விட்டதை காட்டியதாக முன்னாள் வீரர்கள் அஜய் ஜடேஜா மற்றும் சுனில் கவாஸ்கர் போன்றவர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் , அந்த போட்டியின் 3-வது நாளின் மாலை நேரத்தில் நிகழ்ந்த அந்த அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு ரிஷப் பண்ட் தான் காரணமென்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். குறிப்பாக மாலை நேரத்தில் விக்கெட் விழுந்ததால் நைட் வாட்ச்மேன் தேவையா என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கேட்ட போது தேவையில்லை என்று சொல்லி தைரியமாக விராட் கோலி பேட்டிங் செய்ய சென்றதாக தெரிவிக்கும் அவர் ரிஷப் பண்ட் மட்டும் அடுத்த நாள் பேட்டிங் செய்ய செல்வேன் என்று அடம் பிடித்ததாக ருசிகரமான பின்னணியை பகிர்ந்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அஷ்வின் நேற்று (டிசம்பர் 28 ) பேசியது பின்வருமாறு.

“அந்த சமயத்தில் விராட் கோலியிடம் உங்களுக்கு நைட் வாட்ச்மேன் தேவையா என்று விக்ரம் ரத்தோர் கேட்டார். அதற்கு நைட் வாட்ச்மேன் எனக்கு தேவையில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விராட் கோலி பதிலளித்தார். மேலும் பொதுவாக உடைமாற்றும் அறையில் ரிசப் பண்ட் ஒரு தலையில் துண்டை போட்டுக்கொண்டு மேஜையில் படுத்திருப்பார். அவர் ஏன் அப்படி செய்கிறார் என்பதற்கான சரியான காரணம் எனக்கு இதுவரை தெரியாது.
இருப்பினும் அந்த சமயத்தில் விக்ரம் ரத்தோர் அவரிடம் சென்று விராட் கோலி நைட் வாட்ச்மேன் தேவையில்லை என்று சொல்லி விட்டார் உங்களுக்கு தேவையா? என்று கேட்டார்.. எனக்கு இன்று இரவு முழுவதும் நைட் வாட்ச்மேன் வேண்டும். நான் அடுத்த நாள் காலையில் சென்று பேட்டிங் செய்கிறேன் என்று ரிசப் பண்ட் அவரிடம் பதிலளித்தார். அதைக்கேட்ட என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதை விட அப்போது நம்மிடம் ஜெயதேவ் உனட்கட் மட்டுமே எஞ்சியுள்ளதால் நான் யாரை அனுப்பட்டும்? என்று விக்ரம் ரத்தோர் அவரிடம் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு அஷ்வின் அல்லது யாரையாவது அனுப்பி விடுங்கள் என்று பதிலளித்த ரிசப் பண்ட் நான் நாளை பேட்டிங் செய்ய செல்கிறேன் என்று கூறினார்” என அஷ்வின் கூறியுள்ளார்.
மொத்தத்தில் அந்த இடத்தில் பேட்டிங் செய்ய செல்லாமல் ரிசப் பண்ட் அடம் பிடித்ததே அக்சர் படேல், உனட்கட் ஆகியோர் முன்கூட்டியே பேட்டிங் செய்ய வந்ததற்கான காரணம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா: பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
டோனி மகளுக்கு மெஸ்சி அளித்த பரிசு!