சீனாவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 14வது நாளான இன்று காலையிலேயே அடுத்தடுத்து 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்ற இந்தியா, ஆசிய போட்டிகளில் தனது 100வது பதக்கத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.
இந்த தொடரில், இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி மற்றும் 40 வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
மகளிருக்கான வில்வித்தை போட்டியில், காம்பவுண்ட் தனிநபர் பிரிவில், வெண்கலம் வென்று இந்தியாவுக்கான இன்றைய பதக்கக் கணக்கை அதிதி சுவாமி துவங்கி வைத்தார்.
இவரை தொடர்ந்து, அதே மகளிர் வில்வித்தை காம்பவுண்ட் தனிநபர் பிரிவில், இந்தியாவின் ஜோதி வெண்ணம் தங்கம் வென்று வரலாறு படைத்தார்.
இந்த 2023 ஆசிய போட்டிகளில், ஜோதி வெண்ணம் வெல்லும் 3வது தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து, ஆடவர் வில்வித்தை விளையாட்டின், தனிநபர் காம்பவுண்ட் பிரிவின் இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் ஓஜஸ் டியோடேல் மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோர் மோதிக்கொண்டனர்.
இவர்களில், ஓஜஸ் டியோடேல் தங்கப் பதக்கத்தையும், அபிஷேக் வர்மா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
பின், மகளிருக்கான கபடி விளையாட்டின் இறுதிப்போட்டியில், இந்திய மகளிர் அணி சீன தைபே அணியை எதிர்கொண்டது. துவக்கத்தில், இந்தியா முன்னிலை பெற்றாலும், பின் சீன தாபே அதிரடி காட்ட போட்டி தொடர்ந்து சமமான நிலையிலேயே சென்றது. இறுதியில், இந்தியா 26-25 என சீன தாபே அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், இந்த தொடரில் 25 தங்கப்பதக்கங்களை வென்ற இந்தியா, அந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆசிய போட்டிகளில் 100 பதக்கங்கள் என்ற இமாலய இலக்கையும் எட்டியுள்ளது.
இன்றைய நாளில், ஆடவர் கிரிக்கெட், ஆடவர் கபடி என இன்னும் பல பதக்கப் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வங்கிகளில் ரூ.2000 நோட்டை மாற்ற இன்றே கடைசி நாள்!
Comments are closed.