ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஆகஸ்ட் 28ம் தேதி, பரம எதிரியான பாகிஸ்தானை, இந்தியா சந்திக்க இருக்கிறது.
1984 முதல் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்திவருகிறது. 50 ஓவர் மற்றும் டி20 முறையில் நடத்தப்படும் இப்போட்டியானது, இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் அங்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான அட்டவணை இன்று (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெற இருக்கிறது.
இதில், இந்தியா, பாகிஸ்தான், தகுதிச்சுற்று அணி என மூன்று அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன. சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 11 அன்று துபாயில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மோதும்.
அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்க இருக்கின்றன. இதில், ஆகஸ்ட் 28ம் தேதி, பாகிஸ்தானை, இந்தியா சந்திக்க இருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
காமன்வெல்த் போட்டி : இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கம்!